தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
தின்னப் பழங்கொண்டு தருவான்;-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்-அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) தேனொத்த பண்டங்கள் கொண்டு-என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான்-சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத) அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத) பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்
புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான், கள்ளர்ல் மயங்குவது போலே அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத) அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ?-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத) விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில் வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்;-எம்மை இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான அம்மைக்கு நல்லவன்,கண்டீர்!-மூளி அத்தைக்கு நல்லவன்,தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்;-பொய்மை சூத்திரம் பழிசொலக் கூசாக் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில் அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
Performed by: Selvi. Prahashni, Selvi Nila Selvi Jayavarshni, Selvi Rishika.
No comments:
Post a Comment